கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுவோரிடம் கலெக்டர் நேரில் சென்று நலம் விசாரிப்பு

திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய  ஊரடங்கு பிறப்பித்தது. அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கி வருகிறது. இருப்பினும் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு அதற்கான மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வருகின்றனர். அதன்படி திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு ராஜாஜிபுரம் பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ேநற்று நேரடியாக சென்று பார்வையிட்டார்.

அப்போது, அவர்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் தினந்தோறும் மருந்து மாத்திரைகள் முறையாக வழங்கப்படுகிறதா என அவர்களிடம் உடல் நலம் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். இதில், அவருடன் நகராட்சி ஆணையர் சி.வி.ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், டாக்டர் வீணா, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.  

746 பேருக்கு கொரோனா: மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் 746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 755  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 265  பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 7595 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றால் 1895 பேர் இறந்துள்ளனர். நேற்று கொரோனா  வைரஸ் தொற்றால் ஒருவர் பலியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: