பெ.நா.பாளையம்: கோவை அருகே அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று சோதனை நடத்தினர். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருப்பவர் கே.வி.என்.ஜெயராமன். இவர், இரண்டு முறை வீரபாண்டி பேரூராட்சியின் தலைவராக இருந்துள்ளார். இவரது வீடு 7-வது வார்டில் ராமசந்திரா நகரில் உள்ளது.
ஜெயராமன் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் நேற்று மதியம் 2 மணி அளவில் ஜெயராமன் வீட்டிற்கு வந்தனர். அப்போது அங்கு அவர், குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். உள்ளே சென்ற போலீசார், மெயின் கேட்டு, வீட்டின் கதவுகளையும் உட்புறமாக தாழிட்டுக் கொண்டு தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையறிந்த அதிமுகவினர் வீட்டின் முன்பாக திரண்டு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினர். போலீசாரின் சோதனை நேற்று இரவுவரையும் தொடர்ந்தது.