திருப்பதியில் நாளை மறுதினம் முதல் ஏழுமலையான் பக்தர்களுக்கு பஞ்சகவ்ய பொருட்கள் விற்பனை: தேவஸ்தான அதிகாரி தகவல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மறுதினம் முதல் பக்தர்களுக்கு பஞ்சகவ்ய பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தேவஸ்தான இணை செயல் அதிகாரி வீரபிரம்மன் தெரிவித்தார். ஆந்திரமாநிலம், திருப்பதி அலிபிரியில் உள்ள தொழிற்சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அதிகாரி வீரபிரம்மன் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்து் பேசியதாவது: ‘பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து பெரும் பால், சாணம், கோமியம், நெய், தயிர் ஆகியவை ஆகும்.  பஞ்சகவ்யத்தால் ஆன பொருட்கள் தயாரித்து  பக்தர்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  நூற்றுக்கணக்கான தேசிய வகை பசுக்களை கொண்ட மிகப்பெரிய கோசாலையை நிர்வகிக்கும் தேவஸ்தானம் தங்களிடம் உள்ள கோமியத்தையும், சாணத்தையும், பாலையும் சரியான முறையில் பயன்படுத்தி திருப்பதி அடிவாரத்தில் உள்ள அலிபிரியில் தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.

தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோ சாலையில் இருந்து மூல பொருட்கள் தயாரிக்க பெறப்படுகிறது. பின்னர், கோயம்புத்தூரை சேர்ந்த ஆயுர்வேதா அமைப்பின் மூலம் பொருட்கள்  தயாரிக்கப்பட்டுள்ளது.அனைத்து பொருட்களையும்  விற்பனைக்கு மற்றும்  கோயில்களில் நடக்கும் ஹோமங்களில் தினசரி தேவைக்கும்  உபயோகப்படுத்தப்பட உள்ளது. எனவே, இந்த பொருட்கள் அனைத்தும் வருகிற 27ம் தேதி முதல் ஏழுமலையானை தரிசிக்கும்  பக்தர்களுக்கு விற்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

பக்தர்கள் சாலை மறியல்: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு குடியாத்தத்தை சேர்ந்த  பாதையாத்திரை குழுவினர் சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தற்போது தரிசனத்திற்கு  அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் டிக்கெட் இல்லாதவர்களுக்கு தரிசனம் செய்ய  அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடனே பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இருப்பினும்  டிக்கெட் உள்ளவர்களை மட்டுமே அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிசென்றனர்.

Related Stories: