நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு எதிராக போராட்டம் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த 12 பேர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து

சென்னை: நீட் தேர்வை எதிர்த்து மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த 2017ம் ஆண்டு சென்னை தி.நகரில் கண்டன போராட்டம் நடைபெற்றது.  அப்போது, பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. இதையடுத்து, தி.நகர் போலீசார் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் உமாபதி, தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் உள்ளிட்ட 12 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், உருவ பொம்மை எரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் இந்த வழக்கில் சென்னை சைதாப்பேட்டை 17வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.  

இதை எதிர்த்து உமாபதி உள்ளிட்ட 12 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 188 பிரிவில், காவல்துறை நேரடியாக வழக்கு பதிவு செய்ய முடியாது. வழக்கு பதிவு செய்வதற்கு சம்மந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெற வேண்டும். நாங்கள் நடத்தியது ஜனநாயக முறையிலான போராட்டம்தான். சட்ட விரோத போராட்டம் இல்லை என்று கோரப்பட்டிருந்தது. இம்மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி, ஜனநாயக ரீதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு எதிராக காவல்துறை பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே, மனுதாரர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் உமாபதி உள்ளிட்ட 12 பேர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related Stories: