சென்னை: தங்கம் விலை நேற்று காலையில் குறைந்து, மாலையில் மீண்டும் அதிகரித்தது. இது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை 18ம் தேதி ஒரு சவரன் ரூ.36,320க்கும், 19ம் தேதி சவரன் ரூ.36,376, 20ம் தேதி சவரன் ரூ.36,704 என்று விலை உயர்ந்தது. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் சவரன் ரூ.408 அதிகரித்தது. 21ம் தேதி சவரனுக்கு ரூ.128 குறைந்து ஒரு சவரன் ரூ.36,576க்கும் விற்கப்பட்டது. மறுநாள்(22ம் தேதி) தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,588க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,704க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.4,583க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.36,664க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் மாலையில் மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. அதாவது, கடந்த சனிக்கிழமை விலையைவிட கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,605க்கும், சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,840க்கும் விற்கப்பட்டது.