அவர்களை வளர்த்துவிட்டோம்; ஆனால் பலனில்லை பாஜகவுடன் நட்பு வைத்ததால் 25 ஆண்டுகள் ‘வேஸ்ட்’- உத்தவ் தாக்கரே காட்டம்

மும்பை: சிவசேனா கட்சி நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவின் 96வது பிறந்தநாளையொட்டி, மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே மும்பையில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், ‘கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவுடன் நண்பர்களாக இருந்தோம்; அவர்களை வளர்த்துவிட்டோம். அதற்கு ஈடாக எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சிவசேனா தனது 25 ஆண்டுகால அரசியல் பயணத்தை வீணடித்துவிட்டது.

மக்களவை தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டப் பேரவை தேர்தலாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு தேர்தலிலும் இந்த இரு கட்சிகளும் ஒன்றாகவே பயணித்தன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிர சட்டசபை தேர்தலுக்கு பின், இருகட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் கூட்டணி உடைந்தது.

பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற எதிர் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்ததால் நாங்கள் எங்களது சித்தாந்தத்தை கைவிட்டுவிட்டதாக பாஜக கூறி வருகிறது. சிவசேனா தனது இந்துத்துவா நிலைப்பாட்டை கைவிடவில்லை; இந்துத்துவாவுக்காக ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற நாங்கள் விரும்பினோம்; ஆனால் இந்துத்துவா மூலம் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.

பாஜகவின் இந்துத்துவா சித்தாந்தம் போலித்தனமானது. இந்துத்துவாவை விட்டு சிவசேனா வெளியேறிவிட்டதா? என்று எங்களிடம் கேட்பவர்களுக்கு, நாங்கள் தரும் பதில் என்னவென்றால், நாங்கள் பாஜகவை விட்டு வெளியேறிவிட்டோம் என்றே கூற விரும்புகிறோம்’ என்று கூறினார்.

Related Stories: