பட்னாவிஸ், பிரமோத் சாவந்த் போல் உத்தரகாண்டில் இளம் தலைவரை தூக்கிவிடும் பாஜக: முட்டுக்கட்டை போடும் மூத்த தலைவர்களால் சிக்கல்

டேராடூன்: மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ், கோவாவில் பிரமோத் சாவந்த் ஆகியோர் போல் உத்தரகாண்டில் இளம் தலைவரான  புஷ்கர் சிங் தாமியை வளர்த்துவிட பாஜக தலைமை முடிவெடுத்த நிலையில், மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் உருவானதில் இருந்து பாஜகவும், காங்கிரசும் மாறி  மாறி ஆட்சியை கைப்பற்றி வருகின்றன. முன்னாள் முதல்வர்கள் பி.சி.கந்தூரி  (பாஜக), ஹரிஷ் ராவத் (காங்கிரஸ்) போன்றோர் கடந்த தேர்தலில்  தோல்வியடைந்ததால், இந்த முறை இரண்டாம் தலைமுறை தலைவர்களின் ஆதிக்கம்  அதிகரித்துள்ளது. அந்த வகையில் 46 வயதான புஷ்கர் சிங் தாமி கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

பாஜகவின் மத்திய தலைமையின் தலையீட்டால் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு புஷ்கர் சிங் தாமிக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டதாக பேசப்பட்டது. மாநில பாஜகவில் கோஷ்டி பூசல் அதிகரித்துள்ள நிலையில் இன்னும் 15 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் சட்டமன்றத் தொகுதியான கதிமா தொகுதியில் போட்டியிட சில மூத்த  கட்சித் தலைவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் கடந்த தேர்தலின் போது காதிமா தொகுதியில் காங்கிரசின் புவன் சந்திர கப்டி 3,000 வாக்குகள் வித்தியாசத்தில்  தோல்வியடைந்தார்.

அதனால் அந்த தொகுதிக்கு பாஜக மூத்த தலைவர்கள் குறிவைத்துள்ளனர். ஆனால் கட்சி தலைமையானது மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களை போன்று உத்தரகாண்டிலும் இளம் தலைவர்களை உருவாக்க முயற்சித்து வருகிறது. அதன்படி மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ், கோவாவில் பிரமோத் சாவந்த் ஆகியோர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல் புஷ்கர் சிங் தாமியையும் கட்சி தலைமை முன்னிருத்தி வருவதாக தகவல்கள் தெரிவிகின்றன.

Related Stories: