புழல்: செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் செல்லியம்மன் நகர் பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொம்மை பொருட்கள் குடோன் உள்ளது. இங்கு, வடமாநிலங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் குடோனின் மேற்பகுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த குடோனில் இருந்து, கரும்புகை வெளிவந்தது. சிறிதுநேரத்தில், தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். தகவலறிந்த செங்குன்றம், மணலி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் சுமார் 30 தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து, பத்து மணி நேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.