×

வடிவேலு பட பாணியில் ஓட்டிப்பார்க்கிறோம் என கூறி புல்லட்டுடன் மாயமான காதல்ஜோடி: பணத்தை தருவதாக பெண்ணின் பெற்றோர் உறுதி

சேலம்: சேலம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில் பழைய டூவீலர் விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் ராம்சரண். இவரது கடைக்கு கடந்த 21ம் தேதி 2 இளம் ஜோடியினர் வந்தனர். அங்கிருந்த விலை உயர்ந்த டூவீலர்களை விலைக்கு கேட்டுள்ளனர். இதில் ஒரு ஜோடி ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள  புல்லட்டை தேர்வு செய்தது. பின்னர், வடிவேலு சினிமா பாணியில் ஓட்டிப்பார்த்துவிட்டு வருவதாக கூறி, அதில் ஏறிச்சென்றனர். வண்டியை எடுத்துகொண்டு ஜோடியாக சென்றவர்கள் மீண்டும் திரும்பவில்லை. நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர், இன்ெனாரு ஜோடியிடம் கேட்டார். ஆனால் அவர்கள் தங்களுக்கு அவர்கள் யார் என்றே தெரியாது என்று ஆரம்பத்தில் கூறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராம்சரண், அந்த ஜோடியை பிடித்து டவுன் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் ‘‘வண்டியில் சென்ற பெண்ணை மட்டும் எங்களுக்கு தெரியும்’’ என அவர்கள் கூறினர். இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், பெண்ணின் பெற்றோரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசி வரவழைத்தனர். அப்போது வண்டிக்கான  பணத்தை நாங்கள் கொடுத்து விடுகிறோம், வழக்கு எல்லாம் வேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதை உறுதிமொழியாக எழுதியும் கொடுத்தனர். இதையடுத்து, புகாரை கடை உரிமையாளர் திரும்ப பெற்றுக்கொண்டார். சேலத்தை சேர்ந்த அந்த பெண், மாணவி என்றும் அவர் காதலனுடன் எஸ்கேப் ஆனதாகவும் கூறப்படுகிறது. குடும்ப மானம் போய்விடுமே என்று பெண்ணின் பெற்றோர் பணத்தை கொடுக்க சம்மதித்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். காதல் ஜோடி புல்லட்டில் எஸ்கேப் ஆகும் வீடியோ காட்சிகள் நேற்று சமூகவலைதளங்களில் வைரலானது.

Tags : Modavelu , Vadivelu image style, magical romantic couple with bullet, girl's parents confirmed
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...