புதுடெல்லி: நாட்டின் 75வது குடியரசு தின விழா வரும் 26ம் தேதி டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் முப்படைகளின் அணிவகுப்பும் இடம் பெறுகிறது. இந்தாண்டு இதில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ராணுவத்தில் கடந்த 1950ம் ஆண்டு முதல் 72 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சீருடை மற்றும் ஆயுத மாற்றங்களை விளக்கும் வகையில், தனி அணிவகுப்பை ராணுவம் நடத்த உள்ளது. இதில், மொத்தம் 6 பிரிவுகள் இடம் பெற உள்ளன. இதில் இடம் பெறும் வீரர்கள் அணிந்து வரும் சீருடைய, துப்பாக்கி ரகம் பற்றி ராணுவ மேஜர் ஜெனரல் அலோக் கக்கர் கூறிய விவரம் வருமாறு:
* முதலில் வரும் ராஜ்புத் படைப்பிரிவு வீரர்கள், 1950ம் ஆண்டில் ராணுவ வீரர்கள் அணிந்திருந்த சீருடையுடன், அப்போது பயன்பாட்டில் இருந்த 303 ரக துப்பாக்கிகளை ஏந்தி வருவார்கள்.
* 2வதாக வரும் அசாம் காலாட்படை வீரர்கள், 1960ம் ஆண்டைய சீருடை அணிந்தும், 303 ரக துப்பாக்கிகளுடன் அணி வகுப்பார்கள்.
* 3வதாக வரும் ஜம்மு காஷ்மீர் காலாட்படை வீரர்கள், 1970ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட சீருடை அணிந்து, 7.62 மிமீ ரக துப்பாக்கிகளை எடுத்து வருவார்கள்.
* 4வது மற்றும் 5வதாக சீக்கிய காலாட் படையினர், ராணுவ கட்டளை பிரிவினர் (ஆர்டினென்ஸ்) தற்போதைய சீருடை அணிந்து, இன்சாஸ் ரக நவீன துப்பாக்கிளை ஏந்தி வருவார்கள்.
* 6வதாக வரும் பாராசூட் படை வீரர்கள், சமீபத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சீருடையுடன், புதிய ரக ‘டாவோர்’ துப்பாக்கிகளை ஏந்தி வருவார்கள்.