9 மாதங்களில் 35 ஆயிரம் ரயில்கள் ரத்து

புதுடெல்லி: கடந்தாண்டு 9 மாதங்களில் பராமரிப்பு பணிகளுக்காக 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர், 2021ம் நிதியாண்டில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்த விவரங்களை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்து இருந்தார். இதற்கு ரயில்வே அளித்துள்ள பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:

கடந்த 2021 - 2022ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பராமரிப்பு பணிகளுக்காக 20,941 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அடுத்த காலாண்டில் 7,117 ரயில்களும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான  3வது காலாண்டில் 6,869 ரயில்களும்  ரத்து செய்யப்பட்டன. இதே காலக் கட்டத்தில் 41,483 ரயில்கள் தாமதமாக வந்துள்ளன.  2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக் கட்டத்தில் 15,199 மெயில்கள் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகின. மேலும்,  26,284 பயணிகள் ரயிலும் தாமதமாக இயக்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மொத்தம் 35,026 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், எத்தனை பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்த விவரங்களை ரயில்வே தெரிவிக்கவில்லை.

Related Stories: