ஒன்றரை சவரன் நகைக்காக சிறுவன் கொலை கடனை அடைக்க கொன்றதாக கைதான பெண் வாக்குமூலம்:உடந்தையாக இருந்த கணவனும் கைது

குளச்சல்: குமரியில் ஒன்றரை சவரன் நகைக்காக 4 வயது சிறுவனை கொன்று பீரோவில் அடைத்ததில் கைதான பெண், கடனை அடைப்பதற்காக நகையை பறிக்க கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதெரிந்தும் மறைத்ததற்காக அவரது கணவனும் கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்த ஜாண் ரிச்சர்டு-சகாய சில்ஜாவின் 4 வயது மகன் ஜோகன் ரிஜி (4) கடந்த 21ம் தேதி மதியம் திடீரென மாயமானான். புகாரின்படி மணவாளக்குறிச்சி போலீசார் விசாரித்தனர். அதே தெருவில் வசிக்கும் ஷரோபின் என்பவரது மனைவி பாத்திமாவை (35) பிடித்து விசாரிக்கையில், ஒன்றரை பவுன் நகைக்காக ஜோகன் ரிஜியை கொன்று நகைகளை திருடியதாகவும், உடலை துணியில் சுற்றி பீரோவில் மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது.

பீரோவை திறந்து பார்த்த போது உள்ளே சிறுவன் ஜோகன் ரிஜி உடல் இருந்தது. இதையடுத்து பாத்திமாவை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், கணவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இரு குழந்தைகள் உள்ளனர். போதிய வருமானம் இல்லாததால் குடும்ப தேவைக்காக அக்கம் பக்கத்திலும், தெரிந்த நபர்களிடமும் கடன் வாங்கினேன். வாணியக்குடியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ரூ.60 ஆயிரம் கொடுக்க வேண்டும். 21ம் தேதிக்குள் பணம் தராவிட்டால், காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என கூறினார். அன்று மதியம் ஜோகன் ரிஜி எங்கள் வீட்டு அருகில் விளையாடியதை பார்த்தேன்.

அவனை வீட்டுக்கு அழைத்து சென்று மடியில் உட்கார வைத்து கொஞ்சியவாறு செயினை அறுக்க முயன்றேன். அவன் சத்தம் போட்டு அழவே கூச்சல் போடக்கூடாது என்பதற்காக துணியால் வாயை கட்டினேன். பின்னர் கை, கால்களை கட்டி கழுத்தை நெரித்தேன். சிறிது நேரத்தில் மூச்சு திணறி இறந்தான். பின்னர் நகைகளை கழற்றிவிட்டு உடலை துணியால் சுற்றி பீரோவுக்குள் வைத்து பூட்டினேன். சிறுவனை மற்றவர்கள் தேடியபோது நானும் தெரியாதது போல் தேடினேன்.

இரவில் கணவர் வந்ததும் நடந்ததை  கூறினேன். என்னை கண்டித்த அவர், வெளியே தெரியாமல் இருக்க உடலை கடலுக்குள் வீசி விடலாம் என்றார். ஆனால் விடிய, விடிய ஆள் நடமாட்டம் இருந்ததால் உடலை கொண்டு செல்ல முடிய வில்லை. இதற்கிடையே நான் நகையை அடகு வைத்து, அதன் மூலம் கிடைத்த ரூ.40 ஆயிரம் பணத்தை வாணியக்குடியை சேர்ந்த பெண்ணிடம் கொடுத்தது காவல் துறையினருக்கு தெரியவே சிக்கிக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கொலையை மறைத்த குற்றத்திற்காக அவரது கணவர் ஷரோபினையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

Related Stories: