சென்னை:
சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆலப்புழாவிற்கு
எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர்
ரயில்வே மார்க்கத்தில் செவ்வாப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் ரயில் வருவதை
பார்க்காத ஒருவர் தனது பைக்கில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது
திடீரென எக்ஸ்பிரஸ் ரயில் அருகே வந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் செய்வது
அறியாமல் தனது பைக்கை தண்டவாளத்திலேயே விட்டு விட்டு தப்பியுள்ளார். இதனால்
ரயிலுக்கு அடியில் சிக்கிய பைக் 3 கி.மீ. தூரத்துக்கு இழுத்துச்
செல்லப்பட்டது.
புட்லுர் அருகே ரயில் சென்றபோது ரயிலுக்கு அடியில்
சத்தம் வருவதை உணர்ந்த ரயில் ஓட்டுனர்கள் உடனடியாக ரயிலை நிறுத்தி
பார்த்தபோது ரயில் இன்ஜினில் பைக் சிக்கி இருந்ததை கண்டு
அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, ரயிலுக்கு அடியில் சுக்குநூறாக
உடைந்திருந்த பைக்கை பொதுமக்கள் உதவியுடன் சுத்தியால் உடைத்து 2 மணி நேரம்
போராட்டத்திற்கு பிறகு வெளியே எடுத்தனர். இதனால் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில்
2 மணி நேர தாமதத்திற்குப் பின்னர் புட்லூர் ரயில் நிலையத்திலிருந்து
புறப்பட்டு சென்றது. மேலும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் யார் என்பது
குறித்து ரயில்வே நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.