தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30,580 ஆக குறைந்தது

சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 30,580 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 40 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த மூன்றாவது நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கிய நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்பு குறைந்து வருகிறது. அதன்படி 19ம் தேதி 7,298 பேருக்கும், 20ம் தேதி 7,520 பேருக்கும், 21ம் தேதி 7,038 பேருக்கும், நேற்று முன் தினம் 6,452 பேருக்கும், நேற்று 6,383 பேருக்கும் என நான்காவது நாளாக தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேபோல் நேற்று முன் தினம் தமிழகத்தில் 30,744 என தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 30,580 ஆக குறைந்துள்ளது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,57,732 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30,580 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவிற்கு 2,00,954 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 24,283 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 40 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 25 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 15 பேரும் உயிரிழந்தனர். அதன்படி இதுவரை 37,218 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் அதிகபட்சமாக நேற்று சென்னையில் 6,383 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: