சென்னை: நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்க 299 இடங்களில் தடுப்பணை, நிலத்தடி நீர் செறிவூட்டு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாநில நிலவள, நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குடிநீர், பாசனம் மற்றும் இதர தேவைகளுக்கு நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயன்பாடு ஒவ்வொரு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு வணிக ரீதியாக நிலத்தடி நீர் உறிஞ்சுவதும் முக்கிய காரணம்.இதனால், தான் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்த பகுதிகளில் கண்டறிந்து, அங்கு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் மாநில நிலவள,நீர்வள ஆதார விவர குறிப்பு மையத்துக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், நிலத்தடி நீர் குறைந்த பகுதிகளில் நிலவள, நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் மூலம் மாநிலம் முழுவதும் செயற்கை நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள், தடுப்பணைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, நீர்வளநிலவள திட்டம், தேசிய நீரியல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக நிதி பெறப்பட்டன.