5 மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை அணையை தூர் வார வேண்டும்; விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையை தூர்வார வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. 1958ல் கட்டப்பட்ட இந்த வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை கட்டிய காலம் முதல் தூர்வாரப்படவில்லை. அணை தூர்வாரப்படாத காரணத்தால் வைகை அணை நீர் தேக்க பகுதிக்குள் 15 முதல் 20 அடி வரை வண்டல் மண் படிந்துள்ளது. இதனால் வைகை அணையில் தேங்கும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. வைகை அணையை தூர்வார வேண்டும் என தேனி மாவட்டம் உள்பட 5 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அணையை தூர்வாருவதற்கான முதற்கட்ட ஆய்வு பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

பொதுப்பணித்துறையினர் நீர்தேக்கம் பகுதிக்குள் படகில் சென்று எக்கோ சவுண்டர் என்னும் கருவியின் உதவியுடன் வண்டல் மண் படிவங்கள் தேக்கம் குறித்து ஆய்வு நடத்தினர். இதன்பின் அணையில் தேங்கியுள்ள வண்டல் மண் படிவத்தை தூர்வாருவதற்கான மதிப்பீடு பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்றது. மொத்த வைகை அணையை தூர்வார சுமார் ரூ.800 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இந்த தொகையை கொண்டு புதிய அணையை கட்டிவிடலாம் என்பதால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனாலும் விவசாயிகள் வைகை அணையை தூர்வார வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, வைகை அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அணையை தூர்வார அதிகமான நிதி தேவைப்படும் என்பதாலும், தூர்வாரப்படும் வண்டல் மண்ணை ஒரே நேரத்தில் அப்புறப்படுத்துவது சிரமம் என்பதாலும் வைகை அணையை 4 கட்டமாக தூர்வார திட்டமிடப்பட்டது.

முதற்கட்டமாக அணையின் ஒரு பகுதியை தூர்வார விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணியில் சில மாதங்களாக பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். ரூ.183 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த நிதி மூலம் அணையின் 10 மில்லியன் கனமீட்டர் பரப்பளவு தூர்வாரப்படும் என தெரியவந்தது. அணை பயன்பாட்டிற்கு வந்த போது அணையின் ஆழம் எந்த அளவிற்கு இருந்ததோ, அதே அளவிற்கு தூர்வாரவும் முடிவு செய்யப்பட்டது. தூர்வாரும் போது அள்ளப்படும் வண்டல் மண்ணை வைகை அணையை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் கொட்டிக் கொள்ள விவசாயிகள் ஒப்புதல் அளித்தனர்.

இதற்காக வைகை அணையை சுற்றியுள்ள 4500 விவசாயிகள், வண்டல் மண்ணை பெற்று கொள்ள சம்மதம் தெரிவித்து பொதுப்பணித்துறையினரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அதன்படி வைகை அணையில் அள்ளப்படும் வண்டல் மண், சம்மதம் தெரிவித்துள்ள விவசாயிகளின் நிலத்தில் ஒரு அடி உயரத்திற்கு கொட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான மதிப்பீடு பட்டியல் தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மதிப்பீடு பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் வைகை அணையை தூர்வாரும் திட்டம் வெறும் திட்ட வடிவிலேயே உள்ளது. எனவே தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு வைகை அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: