வியாபாரிகள், பொதுமக்கள் இன்றி கோயம்பேடு மார்க்கெட் வெறிச்சோடியது

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் தற்போது தினசரி பாதிப்பில் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக அனைவரும் கண்டிப்பாக முககவம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் வார இறுதி நாட்களில் கோயில்களை மூடுதல், ஞாயிறு முழுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து வருகின்றனர். இருப்பினும் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மார்க்கெட் உள்ளிட்டவைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது.

மேலும், கடந்த வாரங்களில் கொண்டாடப்பட்ட பண்டிகையாலும் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தின் மிக பெரிய மொத்த விற்பனை சந்தையாக ேகாயம்பேடுக்கு தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். விடிய, விடிய காய்கறிகளை ஏற்றி இறக்கும் லோடுமேன்கள், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் லாரி டிரைவர்கள், இரவு முழுக்க டிபன் விற்கும் சிறு கடைகள், சில்லறை வர்த்தகத்திலும் மொத்த வர்த்தகத்திலும் வியாபாரத்தில் சுறுசுறுப்பு காட்டும் வியாபாரிகள் என களைகட்டும். அந்த வகையில் தினமும் 700க்கும் மேற்பட்ட காய்கறி வாகனங்கள் வருகின்றன.

தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் 6 ஆயிரம் டன் காய்கறிகள் மற்றும் டன் கணக்கில் பூக்கள் வரத்து உள்ளது. அவற்றை ஏற்றி இறக்கும் வகையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 3,000 பேர், வியாபாரிகள் 8,000 ஆயிரம் பேர் உள்ளனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த மார்க்கெட், கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மூடப்பட்டு, சில மாதங்கள் திருமழிசையில் இயங்கி வந்தது. பின்னர் மீண்டும் கோயம்பேட்டில் இயங்கி வருகிறது. தற்போதும் தொற்று அதிகரித்து வந்தாலும், பலர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதனால் தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. அதற்கேற்றார்போல் தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று முழு ஊரடங்கு என்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த மார்க்கெட், வியாபாரிகள், பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மீண்டும் நாளை அதிகாலை முதல் களைகட்டும்.

Related Stories: