ராஞ்சி:ஜார்கண்ட் மாநிலத்தில் தன்பாத் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தம் ஆனந்த், கடந்தாண்டு ஜூலை மாதம் நடைபயிற்சி சென்றபோது ஆட்டோ மோதி இறந்தார். இது திட்டமிட்ட கொலை என்று சர்ச்சை எழுந்ததால், இதன் விசாரணை சிபிஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் விசாரணை அறிக்கை ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதில் உள்ள தகவல்களை பார்த்த நீதிபதிகள், அறிக்கையை நிராகரித்தனர். மேலும், நீதிபதிகள் கூறியதாவது:கொலை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, உத்தம் ஆனந்த் ஒரு நீதிபதி என்று அவர் மீது ஆட்டோவை மோதும் முன்பே தெரிந்துள்ளது.
ஆனால், அவருடைய செல்போனை பறிக்கவே இந்த கொலை நடந்துள்ளதாக சிபிஐ எப்படி முடிவுக்கு வந்தது? மேலும், அதன் நம்பகத்தன்மை மீதும் கேள்வி எழுகிறது. இதை பார்க்கும் போது, இந்த வழக்கில் இருந்து விலகி கொள்வதற்காகவே சிபிஐ இப்படி மெத்தனம் காட்டுவதாக தெரிகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை தண்டித்தால் மட்டுமே மீண்டும் இப்படிப்பட்ட சம்பவம் நடக்காது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். என்ஐஏ.விடம் ஒப்படைக்கலாம்இந்த வழக்கு விசாரணையின்போது சிபிஐ தரப்பு கூடுதல் அட்வகேட் ஜெனரல், காணொலி மூலம் ஆஜராகினார். அவர் கூறுகையில், ‘இந்த வழக்கில் இருந்து சிபிஐ விடுபட நினைப்பதாக நீதிமன்றம் கருதினால், சிபிஐ போன்று தேசிய புலனாய்வு முகமையும் (என்ஐஏ) திறமை வாய்ந்தது. இந்த வழக்கை அவர்களிடம் ஒப்படைக்கலாம்,’ என்றார்.