ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு

* பணியை தொடங்க அனுமதிக்க மாட்டோம்

* கர்நாடகா முதல்வர் அதிரடி அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநில அரசுக்கு எதிராக காவிரி, கிருஷ்ணா, மகாதயி உள்ளிட்ட நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், மகராஷ்டிரா, கோவா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தொடர்ந்துள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளை முடிப்பது தொடர்பாக வழக்குகளில் ஆஜராகி வரும் மூத்த வக்கீல்களுடன் பெங்களூவில் உள்ள முதல்வரின் அரசு இல்லமான கிருஷ்ணாவில் இருந்து காணொலி மூலம் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் நீர்ப்பாசன துறை அமைச்சர் கோவிந்த கார்ஜோள் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து, முதல்வர் பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது: ‘கர்நாடகாவுக்கு எதிராக தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா மாநில அரசுகள் சார்பில் தாக்கல் செய்துள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது குறித்து வழக்கில் ஆஜராகி வரும் வக்கீல்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினேன்.

கர்நாடகா-தமிழகம் இடையிலான காவிரி நீர் பங்கீட்டு பிரச்னையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின் படி காவிரி ஆணையம் மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் எந்த திட்டம் செயல்படுத்த வேண்டுமானாலும் காவிரி மேலாண்ைம ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது உள்பட பல விதிமுறைகள் உள்ளது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல், தமிழக அரசு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் 2வது கட்ட பணியை ₹4,600 ேகாடி செலவில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

தமிழக அரசின் திட்டத்திற்கு கர்நாடகாவின் எதிர்ப்பு உள்ளது. தமிழக அரசின் திட்டம் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம். இதற்கான அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாக எழும் சவால்களை சந்திப்போம். மேகதாதுவில் அணை கட்டுவது, தமிழக அரசின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து ஆலோசிக்க வரும் பிப்ரவரி 2வது வாரம் பெங்களூருவில் சட்டப்பேரவை மற்றும் மேலவை எதிர்க்கட்சி தலைவர்கள், இரு அவைகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும். அவசியம் ஏற்படும் பட்சத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: