விவசாயம், குடிநீருக்கு ஆதாரமாக உள்ள கொளவாய் ஏரியில் கழிவுநீர் கலப்பு: விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு: விவசாயம், குடிநீருக்கு ஆதாரமாக உள்ள கொளவாய் ஏரியில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்பட கூடியதாக கொளவாய் ஏரி உள்ளது. எப்போதும் வற்றாமல் நீர்வரத்தோடு இருக்கும் இந்த ஏரி, பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மிக முக்கியமான ஏரியாக திகழ்கிறது. இந்த ஏரியின் நீர்வரத்து முழு கொள்ளவை எட்டியும், தடுப்பணை இல்லாததால், இதில் சேமிக்கப்படும் நீர் மக்களுக்கு பயன்படவில்லை. நீர் முழுவதும் வெளியேறி பாலாற்றில் கலந்து விடுகிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளான சக்தி நகர், வினோபா நகர், அக்‌ஷஷயா நகர் உள்பட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பயன்படுத்தப்படும் சாப்பாட்டு இலைகள், பிளாஸ்டிக் கவர்கள், கழிவுநீர், செங்கல்பட்டு நகராட்சி கழிவுநீர், மகேந்திரசிட்டி தொழிற்சாலை கழிவுநீர் உள்பட ஏரியை சுற்றி நான்கு புறங்களில் இருந்து வரும் கழிவுநீர் நேரடியாக கொளவாய் ஏரியில் கலக்கிறது. இதனால், அஞ்சூர், அம்மனம்பாக்கம் உள்பட பல பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும், இந்த ஏரி நீரினை கொண்டு, லட்சக்கணக்கான மக்கள் குடிநீர் பஞ்சமின்றி வாழ்ந்த கோடைகாலங்களில், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் பரிதவித்து வரும் நிலை உருவாகிறது. கழிவுநீர் கலப்பதால், தற்போது வெளிநாடுகளில் இருந்து பலவகை பறவைகள் வருவதும் முற்றிலும் குறைந்துவிட்டது. செங்கல்பட்டு அருகே, தண்டவாளத்தின் கீழ்  உள்ள கால்வாயின் நடுவே மிகப்பெரிய தொட்டி இருப்பதால், கால்வாய் நடுவே குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளன.

எனவே, கால்வாய் வழியாக வடியக்கூடிய நீர் சரியாக வடிவதில்லை. மழைக்காலங்களில் தண்ணீர் வடியாமல் ஆங்காங்கே குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.  அதனால் கால்வாய் அடியில் உள்ள தொட்டியை அகற்றி ஏரியில் கலக்கும் கழிவுநீரை தடுத்து, ஏரியில் கலக்காமல் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த ஏரிநீர் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பயன்படும் விதமாக, ஏரிநீரை சேமிக்கும் வகையில் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: