நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 662 கோடியில் திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 662.22 கோடி மதிப்பீட்டில் 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ₹8.93 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் திருப்பூர் ஒன்றியங்களை சார்ந்த 155 ஊரக  குடியிருப்புகளுக்கு ₹99.24 கோடி மதிப்பீட்டிலான கூட்டு குடிநீர் திட்டம், கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்தைச் சார்ந்த 274 ஊரக குடியிருப்புகளுக்கு 81.41 கோடி மதிப்பீட்டிலான கூட்டு குடிநீர் திட்டம், கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி (தெற்கு), பொள்ளாச்சி (வடக்கு) மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியங்களை சார்ந்த 212 ஊரக குடியிருப்புகளுக்கு ₹69.31 கோடி மதிப்பீட்டிலான கூட்டு குடிநீர் திட்டம், நாமக்கல் மாவட்டம்  நாமக்கல் நகராட்சிக்கான 185.24 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தை சார்ந்த ராயக்கோட்டை மற்றும் 28 ஊரக குடியிருப்புகளுக்கு ₹8.46 கோடி மதிப்பீட்டிலான கூட்டு குடிநீர் திட்டம்,திருச்சி, ஈரோடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம், தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் தருவைக்குளம் உரக்கிடங்கு பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், தூத்துக்குடி மாநகராட்சியில் போக்குவரத்து பூங்கா, அறிவியல் பூங்கா, கோளரங்கம் மற்றும் மானுடவியல் பூங்கா, மதுரை மாநகராட்சியில் தரைப்பாலம் உயர்மட்ட பாலமாக மாற்றியமைப்பு, திண்டுக்கல் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நுண்ணுரம் செயலாக்க மைய கட்டிடம்,கோயம்புத்தூர் மாநகராட்சி, கரும்புக்கடை தெற்கு மண்டலத்தில் ₹75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற சுகாதார மையக் கட்டிடம், பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம் என மொத்தம் ₹662.22 கோடி மதிப்பீட்டிலான 17 முடிவுற்ற திட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

நகராட்சி நிர்வாக துறை சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி, திருவள்ளுவர் சாலையில் ₹2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான கட்டிடம், நூலகம் மற்றும் அறிவுசார் மையம், நவீன எரிவாயு தகன மேடை என மொத்தம் ₹8 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், மகேஷ் பொய்யாமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: