புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 10ம் தேதி முதல் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி நடந்து வருகிறது. முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது போடப்படுகிறது. இந்நிலையில், பூஸ்டர் தடுப்பூசி போடுவது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறையை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் விகாஸ் செல் அனுப்பியுள்ளார். அதில், ‘ஜனவரி 10ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வரும் ‘கூடுதல் டோஸ்’ தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியுடைய நபர்கள், 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட நாளில் இருந்து 39 வாரங்கள் முடிந்த பிறகே அதை செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால், அதில் இருந்து குணமான பிறகு 3 மாதங்களுக்கு பிறகே அந்த நபர் முதல் அல்லது 2வது டோஸ் தடுப்பூசி அல்லது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், உள்ளூர் ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.