வேலூரில் போக்குவரத்து நெரிசல் குறைக்க கிரீன் சர்க்கிளில் போலீஸ் பூத், சிக்னல் கம்பங்கள் அகற்றம்-விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை

வேலூர் :  வேலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிரீன் சர்க்கிளில் உள்ள போலீஸ் பூத், சிக்னல் கம்பங்கள் அகற்றப்பட்டது. விரைவில் சாலை அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வேலூரின் மைய பகுதியான கிரீன் சர்க்கிள் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது வேலூரில் இருந்து காட்பாடி நோக்கி செல்லும் வாகனங்கள், நேஷனல் சர்க்கிளில் இருந்து பழைய காட்பாடி சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் திரும்பி, ரயில்வே மேம்பாலம் வழியாக காட்பாடி நோக்கி செல்லும்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலத்தின் கீழ் இருந்த கிரீன் சர்க்கிள் பூங்காவின் அகலத்தை குறைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மூன்று இடங்களில் உள்ள பூங்காவின் அலகம் குறைக்கப்பட்டுள்ளது. விரைவில் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதற்கிடையில் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் வைக்கப்பட்டு இருந்த போலீஸ் பூத், சிக்னல் கம்பங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நேற்று போலீஸ் பூத் மற்றும் இரு பக்கங்களில் அமைக்கப்பட்டு இருந்த சிக்னல் கம்பங்கள் அகற்றப்பட்டது. அந்த பகுதியில் புதிதாக சாலை அமைத்து ஏற்கனவே உள்ள சாலையுடன் இணைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இப்பணிகள் அனைத்தும் முழுமையாக செய்து முடித்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Stories: