ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்து கிடையாது நெல்லையில் 1277 ஏக்கர் நிலங்களுக்கு இயற்கை விளைபொருள் தரச்சான்று-கலெக்டர் விஷ்ணு தகவல்

நெல்லை : ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் இல்லாத 1277 ஏக்கர் நிலங்களுக்கு இயற்கை விளைபொருள் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதாக நெல்லையில் கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார். பாளையங்கோட்டை  ஜான்ஸ் கல்லூரி எதிரில் மாவட்ட நிர்வாகம், நெல்லை மாநகராட்சி, வேளாண்மை  மற்றும் உழவர் நலத்துறை இணைந்து இயற்கை வேளாண் பொருட்களுக்கான அங்காடியை  ஏற்பாடு செய்துள்ளது. இந்த அங்காடியை பாளை தொகுதி எம்எல்ஏ அப்துல்வகாப்,  மாநகராட்சி கமிஷனர் விஷ்ணுசந்திரன் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் விஷ்ணு  தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:

ரசாயன உரங்கள்,  பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் கனரக உலோகங்கள் இல்லாத இயற்கை வேளாண்  விளை பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் இந்த  இயற்கை வேளாண் விளைபொருட்களுக்கான அங்காடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட வேளாண் விளை  பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு தமிழக அங்கக சான்றளிப்பு  துறையால் அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தரச் சான்றிதழ் சுவிட்சர்லாந்து நாடு இயற்கை வேளாண்மை சட்டத்தில் இந்திய வேளாண் விளை  பொருட்களுக்கு வரையறுக்கப்பட்ட தர நிலைகளுக்கு இணையானது.

நெல்லை  மாவட்டத்தில் 2 ஆயிரத்து 891 ஏக்கர் இயற்கை வேளாண்மை தர சான்றிதழுக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது. 1277 ஏக்கர் பரப்பளவில் 22 தனி விவசாயிகள், 5  வணிக நிறுவனங்கள், ஒரு வனக்குழுவுக்கு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில்  முதன்முறையாக நெல்லை மாவட்ட காணி மக்களின் 40 வனப் பொருட்களுக்கு அங்கக  சான்று அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இயற்கை வேளாண் அங்காடியில் பாரம்பரிய நெல்  ரகங்கள் காட்டுயாணம், கருப்புக்கவுணி, பூங்கார், கொட்டாரம் சம்பா, ஆத்தூர் கிச்சலி சம்பா தூய மல்லி போன்ற ரகங்களும், மக்காச்சோளம், பயறு வகைகள், நிலக்கடைலை, மிளகு, முந்திரி, தென்னை, தீவனப் பயிர்கள், கறிவேப்பிலை, வெட்டிவேர் போன்ற பயிர்களும், வாழை, எலுமிச்சை, நார்த்தை, மா, பலா, நெல்லி, முள் சீத்தா, கொய்யா, மாதுளை, நாவல், சப்போட்டா, பப்பாளி போன்ற பழ வகைப் பயிர்களும், கத்திரி, வெண்டை, தக்காளி, புடலங்காய், பாகற்காய், பீர்க்கன்காய் போன்ற காய்கறி பயிர்களும், பல வகை கீரைகளும்  சான்றளிப்புக்கு உட்படுத்தப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. பொதுமக்கள்  தங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இயற் கை வேளாண்மைக்கும், இயற்கை  விவசாயத்திற்கும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில்  வேளாண் மை துறை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன், வேளாண்மை விற்பனைத்துறை  துணை இயக்குநர் முருகானந்தம், தோட்டக்கலைத்துறை  துணை இயக்குநர்  பாலகிருஷ்ணன், அங்கக சான்று உதவி இயக்குநர் சுரேஷ் மற்றும் அரசு  அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: