சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் குடியரசுதினவிழாவை முன்னிட்டு முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசு தின விழாவை முன்னிட்டு மெரினா கடற்கரை சாலையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை 2-வது நாளாக இன்று நடைபெற்றது. அப்போது ஆளுநர், முதலமைச்சர் வரும்போது மரியாதை செய்வது போன்ற ஒத்திகையும், தொடர்ந்து முப்படை அணிவகுப்பு ஒத்திகையும் மேற்கொள்ளப்பட்டது.
தேசிய மாணவர், மத்திய தொழிற்பாதுகாப்புப்படை, ஆர்பிஎப், காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களும் அணிவகுப்பு ஒத்திகையை மேற்கொண்டனர். ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெறுவதற்கான அறிவிப்பு ஒத்திகையும் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும், பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திகை காரணமாக கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.