இராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் காத்துக்கிடக்கின்றனர். பரமக்குடி சுற்றுவட்டார கிராமங்களான கள்ளிக்குடி, கொத்தங்குளம், பி.புத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடர்மழை பெய்ததின் விளைவாக ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் இருமடங்கு அதிகமாக சுமார் 5,000 ஹெக்டரில் நெல்சாகுபடி செய்யப்பட்டது. ஏக்கருக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை செலவு செய்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 முதல் 50 மூட்டைகள் வரை நெல் விளைச்சல்கள் கிடைத்துள்ளது. ஆனால் ஆன்லைனில் பதிவு செய்து 20 நாட்கள் ஆகியும் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெல்மூட்டைகளுடன் விவசாயிகள் இரவு, பகலாக காத்திருக்கின்றனர்.