×

கோவை அருகே தனியார் குடோன் வளாகத்தில் பதுங்கியபடி 5 நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை புலி சிக்கியது

கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே தனியார் குடோன் வளாகத்தில் பதுங்கியபடி 5 நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை புலி நீண்ட போராட்டத்திற்கு பிறகு கூண்டில் சிக்கியுள்ளது. மதுக்கரையை அடுத்த பி.கே.புதூரில் ஊருக்குள் புகுந்து வளர்ப்பு நாய்கள் மற்றும் தெருநாய்களை கடித்து வேட்டையாடி வந்த சிறுத்தை புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இந்த காட்சிகள் கூண்டுக்குள் வைக்கப்பட்டிருந்த நவீன கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாமல் சிறுத்தை புலியை பிடித்த வனத்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் சிறுத்தை புலிகள் போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு பகல் பாராமல் கண்காணித்து சிறுத்தை புலியை வனத்துறையினர் பிடித்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

குனியமுத்தூரை அடுத்த பி.கே.புதூரில் கடந்த 2 வாரங்களாக குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை புலி சுற்றி வருவது தெரிய வந்தது. அந்த சிறுத்தை புலி தெருநாய்களை வேட்டையாடி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. அதனை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயன்ற போது கடந்த 17ஆம் தேதி பி.கே.புதூரில் உள்ள தனியார் குடோன் வளாகத்தில் புகுந்த சிறுத்தை புலி அங்கேயே பதுங்கியது. அது தப்பித்து செல்லாமல் இருக்க மொத்த குடோனையும் கோவை வனத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். குடோனை சுற்றிலும் வலைகளை கட்டினர். குடோனில் வாசல்களில் 2 இரும்பு கூண்டுகள் அமைக்கப்பட்டன. அவற்றில் உயிருள்ள நாய் மற்றும் இறைச்சி வைக்கப்பட்டன என்றாலும் அவற்றை சாப்பிட சிறுத்தை புலி வரவில்லை.

ஒருமுறை கூண்டுக்குள் சென்று நூலிழையில் தப்பித்த சிறுத்தை புலியை பிடிக்க 3 கூண்டுகளில் உயிருள்ள சேவல், கோழி கட்டப்பட்டது. அத்துடன் நவீன கேமராக்களும் பொருத்தப்பட்டன. 5 நாட்கள் போக்குகாட்டிய சிறுத்தை புலி கடைசியாக நேற்று இரவு கூண்டுக்குள் நுழைந்த போது சிக்கி கொண்டது. இந்த பணியில் கோவை வனத்துறையை சேர்ந்த 50 வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபட்டு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சிறுத்தை புலியை பிடித்துள்ளனர். 5 நாட்களாக அந்த சிறுத்தை புலிக்கு போதிய உணவு தண்ணீர் இல்லாததால் சோர்வாக காணப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதனாலேயே கூண்டுக்குள் அமைதியாக இருந்ததாக வனத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். பிடிப்பட்ட சிறுத்தை புலியை பொள்ளாச்சி டாப் சிலிப் வனப்பகுதியில் விட வனத்துறையினர் கொண்டு சென்றுள்ளனர். சிறுத்தை புலி பிடிபட்டதால் குனியமுத்தூர், பி.கே.புதூர், மதுக்கரை பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags : Kudon ,Cove , Leopard
× RELATED ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் ஆற்றல்...