புதுடெல்லி: ‘உள்நாட்டு விமான பயணத்தின்போது பயணிகள் விமானத்துக்குள் ஒரு பை மட்டுமே எடுத்து செல்ல வேண்டும்,’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து விமான நிறுவனங்கள், விமான நிலையங்களுக்கு விமான போக்குவரத்து ஆணையம் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: உள்நாட்டு விமான பயணங்களின்போது பயணிகள், விமானத்துக்குள் ஒரு பையை மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், இதை யாரும் பின்பற்றவில்லை.
பயணிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பைகளை எடுத்து செல்கின்றனர். இதனால், பாதுகாப்பு சோதனையின் போது அதிக நேர விரயம் ஏற்படுகிறது. இதனால், பயணிகளை விமானத்துக்குள் அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது. இதர பயணிகளுக்கும் தொல்லைகள் ஏற்படுகிறது. எனவே, உள்நாட்டு விமான பயணிகள் ஒரு பையை மட்டுமே எடுத்து செல்வதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக, பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு விமான டிக்கெட்டுகள், விமானத்தில் ஏறுவதற்கான ஆவணங்கள் போன்றவற்றில் இந்த விதிமுறையை தெளிவாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.