கட்சியினரை பினாமியாக்கிய மாஜி அமைச்சர் அன்பழகன் அதிமுக நிர்வாகிகள் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கியது பணம்: வங்கி லாக்கர்களை திறந்து விசாரிக்க விஜிலென்ஸ் முடிவு

தர்மபுரி: அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் கட்சியினரை பினாமியாக்கி கோடிக்கணக்கில் சொத்து குவித்திருப்பது விஜிலென்ஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த அதிரடி சோதனையில் கட்சி நிர்வாகிகள் வீட்டிலிருந்தும் கணக்கில் வராத பணம், கட்டுக்கட்டாக சிக்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதன்பேரில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி,   வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர், தங்கமணி, எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவன் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு நடந்தது. இதில் கோடிக்கணக்கில் ஆவணங்கள் சிக்கியுள்ளது. இந்நிலையில் 6வது மாஜி அமைச்சராக அன்பழகன் தொடர்புடைய 58 இடங்களில் நேற்று முன்தினம்  விஜிலென்ஸ் ரெய்டு நடந்தது.

தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளரான அன்பழகன், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக 23.5.2016 முதல் 6.5.2021 வரை பதவி வகித்தார். வேளாண்மைத்துறை அமைச்சராகவும் அவர் கூடுதல் பொறுப்பு வகித்தார். இப்படி பொறுப்பு வகித்த காலத்தில் அதிகாரத்தை பயன் படுத்தி வருமானத்திற்கு அதிகமாக தனது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் சொத்து சேர்த்ததாக கிருஷ்ண மூர்த்தி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உரிய விசாரணை நடத்தும்படி உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவின்பேரில், முன்னாள் அமைச்சர் அன்பழகன் (62), அவரது மனைவி மல்லிகா(55), மகன்கள் சசிமோகன்(29), சந்திரமோகன்(32), மருமகள் வைஷ்ணவி(32) ஆகிய 5 பேர் மீது தர்மபுரி மாவட்ட விஜிலென்ஸ் போலீசார் 5 பிரிவுகளில் வருமானத்திற்கு அதிகமாக ₹11.32 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

 இதன் எதிரொலியாக தர்மபுரியில் 53, சேலத்தில்1, சென்னையில் 3, தெலங்கானா மாநிலத்தில் 1 என்று அன்பழகன் தொடர்புடைய 58 இடங்களில் 300க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். தர்மபுரி மாவட்டம் கெரேகோடஅள்ளியில் தர்மபுரி மாவட்ட விஜிலென்ஸ் டிஎஸ்பி (பொறுப்பு) ஜெய்குமார் தலைமையில் நேற்றுமுன்தினம் காலை 5 மணிக்கு தொடங்கி இரவு 9.45 மணி வரை சுமார் 17 மணி நேரம் சோதனை நடந்தது. இந்த சோதனைகளில் ₹2 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 650 ரொக்கம், 6.637 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கணக்கில் வராத பணம் ₹2 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து 650 மற்றும் வங்கி பெட்டக சாவி, வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிமுக மாஜி அமைச்சர் அன்பழகன் குடும்பத்தினர் மற்றும் பினாமிகள் பெயரில் கோடிக்கணக்கான பணத்தை கிரானைட் நிறுவனங்கள், குவாரிகளில் முதலீடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.  இதன்பேரில் விசாரணை நடத்தியதில் அவரது பெயரிலும், மனைவி, மகன்கள், மருமகள் பெயரிலும் ஏராளமான சொத்துக்கள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.  இது மட்டுமின்றி உறவினர்கள் சரவணன், செந்தில்குமார், ரவிசங்கர்,  பினாமி ஜெயபால், மருமகன் சிவக்குமார் ஆகியோர் பெயரிலும் குவாரிகள், கிரஷர்கள், கிரானைட் தொழிற்சாலைகளை வாங்கி குவித்துள்ளார்.

இதேபோல் தனக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகளையும் அவர், தனது பினாமிகளாகவே வைத்துள்ளார் என்பதும் இந்த ரெய்டில் அம்பலமாகி உள்ளது. நேற்று முன்தினம் நடந்த ரெய்டில் பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் பாஸ்கர் வீட்டில் ₹66 லட்சம், இக்பால் என்பவர் வீட்டில் ₹71 லட்சம், பாலக்கோடு மங்களகணபதி பைனான்ஸ் நிறுவனத்தில்  ₹55 லட்சம், ராஜா என்பவரிடம் ₹11 லட்சம், அண்ணாதுரை என்பவர் வீட்டில் ₹11 லட்சம் என்று, கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளது. இவர்கள் அனைவரும் அதிமுகவில் பொறுப்புகளில் உள்ளனர். அதேபோல் சில தனியார் வங்கிகளின் லாக்கர் சாவிகளும் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் இவற்றை ஒப்படைத்து உரிய அனுமதி பெற்று விரைவில் வங்கி லாக்கர் திறக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல் மேலும் சில அதிமுக முக்கிய நிர்வாகிகளிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதிகாரி வீட்டில் சிக்கிய ₹40 லட்சம் அன்பழகனுக்கு சொந்தமானதா?

மாஜி அமைச்சர் அன்பழகன் வீட்டில் சோதனை நடந்த நேரத்தில் சேலத்தில் கனிம வளத்துறையில் இணைஇயக்குனராக உள்ள ஜெயபால் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இரும்பாலை  அருகேயுள்ள மல்லமூப்பம்பட்டி ராசிநகரை சேர்ந்தவர் ஜெயபால். தற்போது கரூர்  மாவட்டத்தில் கனிமவளத்துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர்,  தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றிய போது, அதிமுக மாஜி மந்திரி அன்பழகனுக்கு  மிகவும் நெருக்கமாக இருந்தார். அன்பழகனுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி,  தெலங்கானா ஆகிய இடங்களில் கல்குவாரிகள் இருக்கிறது. கிரானைட் கற்கள், ஜெயபால் பணியாற்றும் துறையின் கீழ் வருவதால் இவரை  அமைச்சர் நன்றாக பயன்படுத்திக்கொண்டார். மாஜியுடனான நெருக்கத்தை  பயன்படுத்திய அதிகாரி ஜெயபால், பணத்தை வாரி சுருட்டியுள்ளார்.

தர்மபுரியில் இணை இயக்குனராக இருந்த ஜெயபால், கடந்த  சட்டமன்ற தேர்தலின்போது கரூருக்கு மாற்றப்பட்டார். நேற்றுமுன்தினம் அவரது  வீட்டில் லஞ்சஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். வீட்டின்  ஒவ்வொரு அறையாக சோதனை நடத்திய அதிகாரிகள், பீரோவை திறந்ததும் அங்கிருந்த  பணத்தை பார்த்து மலைத்துப் போனார்கள். சினிமாவில் வருவதுபோல  கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அனைத்தும் ₹500 ரூபாய்  கட்டுகளாகும். அப்படியே அள்ளிய அதிகாரிகள், பணத்தை எண்ணினர். இதில் ₹40  லட்சம் இருந்தது. ₹20 லட்சம் டெபாசிட் செய்ததற்கான ஆவணங்கள், ₹9 லட்சத்து 8  ஆயிரத்திற்கு நகை வாங்கியதற்கான பில்களும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸ்  அதிகாரிகள் கூறுகையில், ‘‘கரூர் கனிமவளத்துறை இணை இயக்குனர் ஜெயபால்  வீட்டில் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள்  நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். அவரது வீட்டில் இருந்து பறிமுதல்  செய்யப்பட்ட ₹40 லட்சம் எங்கிருந்து வந்தது? என்பது குறித்து அவரிடம்  விசாரணை நடத்தப்படும். அவர் மாஜி மந்திரிக்கு பினாமியாக இருந்தாரா?  பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாஜி அமைச்சர் அன்பழகனுக்கு சொந்தமானதா? என்பது  குறித்தும் விசாரிக்க இருக்கிறோம். விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பப்படும்,’’ என்றனர்.

Related Stories: