விஏஓ வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று முன்தினம் இரவு பூட்டி இருந்த விஏஓவின் வீட்டை உடைத்து, 12 சவரன் நகை, ₹70 ஆயிரம்,  வெள்ளி பொருட்கள், டிவி, பட்டுப் புடவைகள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே கடுவஞ்சேரி கிராமம், நெல்லூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (29). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவரது மனைவி கோவிந்தம்மாள் (25). தத்தனூர் கிராம நிர்வாக அலுவலர். கடந்த சில நாட்களுக்கு முன் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு  சென்றனர்.

இந்நிலையில், நேற்று காலை ராமச்சந்திரன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக கோவிந்தம்மாளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அவர் வீட்டுக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், பீரோவில் வைத்திருந்த 12 சவரன் நகை, ₹70 ஆயிரம், விலையுயர்ந்த எல்இடி டிவி, வெள்ளி பொருட்கள், பட்டுப் புடவைகள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேரித்து சென்றனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். விஏஓ வீட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: