துக்க வீட்டில் மது அருந்தியபோது தகராறு; கோடாரியால் சரமாரி வெட்டி தம்பியை கொன்ற அண்ணன்

சென்னை:  கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டணமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(46). இவரது தம்பி சுரேஷ்(37). இருவரும் கட்டிட தொழிலாளிகள். தாய் தனலட்சுமியுடன் வசித்து வந்தனர். சுப்பிரமணிக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். சுரேசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், அேத பகுதியில் நேற்று முன்தினம் நடந்த துக்க நிகழ்ச்சியில் சுப்பிரமணி, சுரேசுடன் சென்றார். அங்கு இரவு வீட்டில் ஒன்றாக அமர்ந்து இருவரும் மது அருந்தினர். அப்போது, போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர். ஆத்திரமடைந்த சுப்பிரமணி வீட்டில் மரம் வெட்ட பயன்படுத்தும் கோடாரியால் சுரேஷை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்.

படுகாயமடைந்த சுரேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக பலியானார். தகவலறிந்த  கவரப்பேட்டை போலீசார் கெட்டணமல்லி கிராமத்துக்கு விரைந்து வந்து சுரேஷின் ரத்தம் கொட்டிய இடத்தையும், கொலைக்கான காரணங்கள் வேறு ஏதேனும் உள்ளதா என அப்பகுதி மக்களிடம் தீவிரமாக விசாரித்தனர். மேலும், சுரேஷின் சடலத்தை கைப்பற்றி அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: