திருப்புத்தூர்: திருப்புத்தூரில் உள்ள மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன்களை இன்று அதிகாலை உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் உள்ள மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன்கள், ரசாயனம் தடவிய மீன்கள், அழுகிய மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ்ஆப் மூலம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனயைடுத்து திருப்புத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர் தியாகராஜன் தலைமையில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இன்று அதிகாலை திருப்புத்தூரில் புதுக்கோட்டை சாலையில் உள்ள மீன் மார்க்கெட் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
6 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் சுமார் 20 கிலோ கெட்டுப்போன மீன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. ெகட்டு போன மீன்கள், ரசாயனம் தடவிய மீன்கள், அழுகிய மீன்களை விற்பனை செய்யக்கூடாது, அப்படி விற்பனை செய்தால் மீன்களை பறிமுதல் செய்வதுடன் அபராதமும் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.