கும்மிடிப்பூண்டி அருகே குடிபோதையில் தம்பி சரமாரி வெட்டி கொலை: அண்ணன் கைது

கும்மிடிப்பூண்டி:   கும்மிடிப்பூண்டி அருகே நேற்றிரவு குடிபோதையில் ஏற்பட்ட வாய்த்தகராறில் தம்பியை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அருகே கெட்டினமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (46). அவரது தம்பி சுரேஷ் (37). கட்டிட கூலித் தொழிலாளிகள். இவர்கள் இருவரும் தாய் தனலட்சுமியுடன் வசித்து வந்தனர். சுப்பிரமணிக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். சுரேஷுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.

  இந்நிலையில், கெட்டினமல்லி கிராமத்தில் நேற்று ஒருவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதில் பங்கேற்ற அண்ணன், தம்பி இருவரும் நேற்றிரவு வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் குடிபோதையில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமான சுப்பிரமணி, வீட்டில் மரம் வெட்ட பயன்படுத்தும் கோடாரியால் தம்பி சுரேஷை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சுரேஷ் ரத்த வெள்ளத்தில் அலறியபடி மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் அண்ணன் சுப்பிரமணி தப்பி ஓடிவிட்டார். சுரேஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். படுகாயம் அடைந்த சுரேஷை மீட்டு, கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் கவரப்பேட்டை போலீசார் கெட்டினமல்லி கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சுரேஷின் ரத்தம் கொட்டிய இடத்தையும், கொலைக்கான காரணங்கள் வேறு ஏதேனும் உள்ளதா என அப்பகுதி மக்களிடம் தீவிரமாக விசாரித்தனர்.  மேலும், சுரேஷின் சடலத்தை கைப்பற்றி, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்று அதிகாலை தலைமறைவான சுப்பிரமணியை கைது செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: