டெல்லி: தடுப்பூசி செலுத்தியதால் கொரோனா மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் குறைந்திருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆசிய முழுவதுமே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 வாரங்களில் அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவிலும் அதே உயர்வு உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு, மராட்டியம், கர்நாடகா, கேரளா, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் வேகம் கவலை அளிப்பதாகவும் அவர் கூறினார். இந்த 6 மாநிலங்களுடன் குஜராத், ஒடிசா, டெல்லி, ராஜஸ்தான் என 10 மாநிலங்களில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் கூறினார்.