டெல்லி : டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு சிலை வைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா கேட்டில் நேதாஜி சிலை இருப்பது போன்ற படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பிரதமர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 பிறந்த நாளை ஒட்டு மொத்த தேசமும் கொண்டாடும் இந்த வேளையில் கருங்கல்லான அவரது பிரம்மாண்ட சிலை இந்தியா கேட்டில் நிறுவப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியா சுபாஷுக்கு கடன்பட்டு இருப்பதற்கு அடையாளமாக அது இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். நேதாஜியின் நிரந்தர சிலை அமைக்கப்படும் வரை இந்தியா கேட்டில் ஹோலோகிராம் எனப்படும் முப்பரிமாண படிமச் சிலை வைக்கப்படும் என்றும் நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதி அதனை திறந்து வைக்க இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்து இருக்கிறார்.