இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு சிலை நிறுவப்படும்: அணையா விளக்கு இடமாற்றம் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் பிரதமர் மோடி அறிவிப்பு!!

டெல்லி : டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு சிலை வைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா கேட்டில் நேதாஜி சிலை இருப்பது போன்ற படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பிரதமர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 பிறந்த நாளை ஒட்டு மொத்த தேசமும் கொண்டாடும் இந்த வேளையில் கருங்கல்லான அவரது பிரம்மாண்ட சிலை இந்தியா கேட்டில் நிறுவப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியா சுபாஷுக்கு கடன்பட்டு இருப்பதற்கு அடையாளமாக அது இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். நேதாஜியின் நிரந்தர சிலை அமைக்கப்படும் வரை இந்தியா கேட்டில் ஹோலோகிராம் எனப்படும் முப்பரிமாண படிமச் சிலை வைக்கப்படும் என்றும் நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதி அதனை திறந்து வைக்க இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்து இருக்கிறார்.

இதனிடையே டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதி அணையா தீபம் 50 ஆண்டுகளுக்குப் பின் அணைக்கப்பட உள்ளது. 1971ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையில் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவாக 1972ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் போர் வீரர் நினைவிடத்தில் அணையா சுடர் ஏற்றப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வரும் சுடர் இன்று மாலை அணைக்கப்பட உள்ளது.

 50 ஆண்டுகளாக எரிந்து வந்த அமர் ஜவான் ஜோதி அணையா சுடர் அணைக்கப்பட இருப்பது வருத்தம் அளிப்பதாக காங்கிரஸ் எம் பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில் டெல்லி அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அணையா சுடருடன் ஒன்றிணைக்கப்பட உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: