அணைக்கட்டு அடுத்த புலிமேட்டில் மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்-உற்சாகமாக பங்கேற்ற இளைஞர்கள்

அணைக்கட்டு : அணைக்கட்டு அடுத்த புலிமேட்டில் மாடு விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. இதில் இளைஞர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த புலிமேடு கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு காளைவிடும் விழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி முரளிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் புண்ணியகோட்டி தலைமையில் தாசில்தார்கள் குமார், விஜயகுமார், மண்டல துணை தாசில்தார் மெர்லின், வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த், அத்தியூர் விஏஓ சங்கர்தயாளன் மற்றும் விழாக்குழுவினர் அனைவரும் விழா உறுதிமொழி ஏற்று கொண்டதை தொடர்ந்து விழா காலை 11 மணியளவில் தொடங்கியது.

விழாவில் புலிமேடு, ஊசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 92 மாடுகள் பங்ககேற்றன. கால்நடை மருத்துவ குழுவினரின் பரிசோதனைக்கு பின்னர் காளைகள் ஒவ்வொன்றாக வீதியில் அவிழ்த்து விடப்பட்டன. புலிமேடு கிராமத்தில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு விழாவை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

வீதியில் சீறி பாய்ந்து ஒடிய மாடுகளை இளைஞர்கள் ஆரவாரத்துடன் விரட்டினர். பரிசுகள் இன்றி விழா நடந்ததால் ஒரே மாடுகள் 4 சுற்றுகள் வரை ஓடியது. தொடர்ந்து விழா பகல் 1.40 மணியளவில் முடிக்கப்பட்டது. விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள் முட்டியதில் லேசான காயமடைந்த பார்வையாளர்கள் 10 பேருக்கு அங்கு முகாமிட்டிருந்த ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

மேலும், அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக அரியூர் போலீசார் உள்பட 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுக்குட்பட்டு விழா நடக்கிறதா என வருவாய்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories: