விழுப்புரம் : விழுப்புரம் திருவிக வீதி, காமராஜர் வீதி சந்திப்பு பகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக பெரியார் சிலை உள்ளது. 3 அடி பீடத்தின் மீது 6 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டு, இரும்புக்கூண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திருவிக வீதி வழியாக சென்ற ஒரு கன்டெய்னர் லாரி, காமராஜர் சாலையில் வளையும்போது, பெரியார் சிலை பீடத்தில் மோதியதில் முற்றிலும் இடிந்து விழுந்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த நகர போலீசார் வந்து லாரியை ஓட்டி வந்த மகாராஷ்டிர மாநிலம் வால்கி பகுதியைச் சேர்ந்த மச்சீந்திராதபலி(52)யை கைது செய்தனர். சிலை உடைப்பை கண்டித்து திமுக, அதிமுக, திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அங்கு வந்த அதிகாரிகள், சிலை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தபின் அனைவரும் கலைந்துசென்றனர். இதனைத்தொடர்ந்து, உடைந்த சிலையை ஊழியர்கள் மீட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று வைத்தனர்.