மார்ச் 1ம்தேதி தேரோட்டம் திருவாரூர் ஆழித்தேர் அலங்கரிக்க குதிரைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

திருவாரூர் : திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழாவினையொட்டி தேரில் பொருத்தப்படும் குதிரைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜசுவாமி கோயில் உள்ளது. சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும்,உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டில் இந்த ஆழித்தேரோட்டம் வரும் மார்ச் மாதம் 15ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான பந்தகால் முகூர்த்தம் நிகழ்ச்சியும் கடந்த 18ம் தேதி நடைபெற்றது.

ஆழித்தேர் சிறப்பு:

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித் தேரானது மற்ற ஊர் தேர்களை போல் எண்பட்டை அறுகோணம், வட்டவடிவமைப்பு போன்று இல்லாமல் பட்டை வடிவ அமைப்பினை கொண்டதாகும். மொத்தம் 20 பட்டைகளை கொண்ட இந்த தேரானது நான்கு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்பகுதி 20 அடி உயரமும், 2வது பகுதி 4 அடி உயரமும், 3வது பகுதி 3அடி உயரமும் கொண்டதாகவும். இறுதியாக 4வது பகுதியாக தேரின் மேடை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தேரோட்டத்தின் போது தியாகரஜசுவாமி அமர்ந்து வலம் வருவது வழக்கம்.

மேலும் சாதாரணமாக 30 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட இந்த தேரானது 4 ராட்சத இரும்பு சக்கரங்கள் உட்பட மொத்தம் 220 டன் எடை கொண்டதாகும். தேரோட்டத்தின் போது மூங்கில்கள், பனஞ்சப்பைகள் கொண்டு விமானம் வரையில் 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி, அதன் மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம், அதற்கும் மேல் 6அடி உயரத்தில் தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு சுமார் 300 டன் எடையுடன் முன் பகுதியில் 33 அடி நீளமும், 11 அடி உயரமும் கொண்ட கம்பீரமான 4 மர குதிரைகள் கட்டப்பட்டு நகரின் 4 வீதிகளையும் ஆடிஅசைந்தாடியபடி நகர்ந்து செல்லும் காட்சியானது கண்கொள்ளா காட்சியாகும்.

இந்நிலையில் தேரோட்டத்திற்கு பின்னர் ஆண்டுதோறும் இந்த மரக்குதிரைகள் அவ்வப்போது சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தாலும் கடந்தாண்டு வரை பயன்படுத்தப்பட்ட குதிரைகள் மிகவும் வலுவிழந்து காணப்பட்டதால் தற்போது 4 குதிரைகளும் ரூ பல லட்சம் மதிப்பில் உபயதாரர்கள் மூலம் புதிதாக தயாரிப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: