தடகள வீராங்கனை வழக்கில் விளையாட்டு சங்கங்களை கவனியுங்கள்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பல கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இரட்டை இலக்கில் பதக்கங்கள்  என்பது கனவாகவே இருக்கிறது. அதற்கு காரணமாக அடிக்கடி சொல்வது ‘வீரர்கள் தேர்வு சரியில்லை’. காரணம் விளையாட்டுச் சங்கங்களில் உள்ள‘அரசியல்’. தமிழகத்தில் பல விளையாட்டுச் சங்கங்களில், குறிப்பிட்ட சாதிக்காரர்கள் மட்டுமே நிர்வாகிகளாக இருக்க வேண்டும், சில சங்கங்களில் தமிழர்களை சேர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். யாரும் கேள்வி கேட்காமல் இருக்க வசதியாக ஓய்வு பெற்ற, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை சங்க நிர்வாகிகளாக உடன் வைத்துக் கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல பல சங்கங்களில் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மட்டும்தான் பொறுப்புக்கு வர முடியும். இவர்களுக்கு இருக்கும் அரசியல், சாதி செல்வாக்கு காரணமாக ‘எதையும்’ கண்டுக் கொள்ளாத போக்கு நிலவியது.

பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பொறுப்பில் இருந்து நீக்கப் போவதாக தெரிந்துக் கொண்ட போலீஸ் அதிகாரி, துப்பாக்கியுடன் அந்தச் சங்கத்தின் செயற்குழு கூட்டத்துக்கு சென்றார். துப்பாக்கியை மேசையில் வைக்க... மீண்டும் நிர்வாகியானார். அதையெல்லாம் நல்ல நிர்வாகிகள், தங்கள் தேர்வு குறித்து வீரர்கள், வீராங்கனைகள் கேள்வி எழுப்ப முடியாத நிலைமை இருந்தது. அதை உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது. தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் தன்னை அனுமதிக்கவில்லை எனக் கூறியும், தமிழ்நாடு தடகள சங்கத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளுடன் வட்டெறிதல் வீராங்கனை நித்யா என்பவர்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் அளித்துள்ள தீர்ப்பு விளையாட்டுச் சங்கங்களின் எதேச்சதிகாரப் போக்கை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. கூடவே திறமையான வீரர்கள், வீராங்கனைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதி மகாதேவன் உத்தரவு

* வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய இந்த விளையாட்டு சங்கங்களை முறைப்படுத்த வேண்டும்.

* ஒவ்வொரு விளையாட்டு சங்கத்தையும் முறைப்படுத்த, தேவையான சட்டம் இயற்றுவது குறித்து மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.

* மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சங்கம் உட்பட எல்லா சங்கங்களும் உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள், சங்கங்களின் நிதிநிலை உள்ளிட்ட விவரங்களை மாநில அரசிடம் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும்.

* தகுதியான வீரர்கள், வீராங்கனைகளை தேர்வு செய்யாதது குறித்து புகார் அளிக்க ஏதுவாக தனி குறைதீர்க்கும் பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

* விளையாட்டு சங்கங்களின் முக்கிய நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்கள்  இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 75 சதவீதம் உறுப்பினர்கள் விளையாட்டு வீரர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* விளையாட்டு சங்கங்களுக்கு நிதி உதவி வழங்கினார்கள்,  என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களுக்கு நிர்வாகி பதவி வழங்கக் கூடாது.

* மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான பதிவு, ஒதுக்கப்பட்ட தொகை ஆகியவற்றை ஆன்லைனில் வெளியிட வேண்டும்.   

* ஒவ்வொரு சங்கமும் தனித் தனியாக இணையதளம் ஆரம்பித்து, சங்கத்திற்கு வந்த நிதியுதவி குறித்த விவரங்களை ஆன்-லைனில் வெளியிட வேண்டும்.

* தகுதியற்ற விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் சங்கத்திற்கு 2ஆண்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

* தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஹாக்கி அணியின் கேப்டனும், சென்னை மாவட்ட ஹாக்கிச் சங்கத்தின் தலைவருமான வி.பாஸ்கரன், ‘‘இது 100சதவீதம் சிறந்த தீர்ப்பு. இந்த உத்தரவை அமல்படுத்துவதின் மூலம் திறமையான வீரர்கள், வீராங்கனைகள் பயன்பெறுவார்கள்.  பணத்தால் சங்கத்தை வளர்க்கலாம். பதக்கங்களை வெல்ல முடியாது. தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் நிறைவேற்ற ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. அவர்கள் வேண்டுமானால் விளையாட்டுச் சங்கங்களுக்கு ஆதரவாக இருக்கலாம். உதவி செய்யலாம். இவர்களை சங்கங்களில் சேர்த்துக் கொண்டு  மற்றவர்கள்,  தவறுகள் செய்துக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் மாவட்ட சங்கங்களின் நிலைமை இன்னும் மோசம். அதையெல்லாம் இந்த தீர்ப்பு மாற்றும். அதற்காக தமிழக அரசு விரைந்து  நடவடிக்கைகள் எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’ என்றார்.

Related Stories: