சென்னை: தங்கம் விலை தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் சவரன் ரூ.408 அதிகரித்திருப்பது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை கடந்த 4 மாதத்துக்கும் மேலாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. சில சமயங்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இதனால், இந்த சமயத்தில் நகை வாங்கலாமா என்ற ஒரு குழப்பமான நிலை நகை வாங்குவோர் இடையே இன்றும் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி ஒரு சவரன் தங்கம் 36,296க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 18ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 24 அதிகரித்து ஒரு சவரன் ₹36,320க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் கிராமுக்கு ₹7 அதிகரித்து ஒரு கிராம் 4,547க்கும், சவரனுக்கு 56 அதிகரித்து ஒரு சவரன் 36,376க்கும் விற்கப்பட்டது.