வருமானத்துக்கு அதிகமாக 11.32 கோடி சொத்து குவிப்பு மாஜி அமைச்சர் அன்பழகன் வீட்டில் ரெய்டு

* சென்னை, தர்மபுரி, சேலம், தெலங்கானா உள்பட 58 இடங்களில் நடந்தது * 2.87 கோடி ரொக்கம், 7 கிலோ தங்கம் சிக்கின

சேலம்: வருமானத்துக்கு அதிகமாக 11.32 கோடி சொத்து குவித்தது தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகனின் வீடு, அலுவலகம், பினாமிகள், நண்பர்கள், தொழில் நண்பர்கள், உறவினர்களின் வீடு என நேற்று ஒரே நேரத்தில் சென்னை, தர்மபுரி, சேலம், தெலங்கானா உள்பட 58 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மொத்தமாக 2.87 கோடி ரொக்கம், 6.637 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி, வங்கி லாக்கர்கள்,  மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து எதிர்க்கட்சியாக இருந்த திமுக சார்பில் தமிழக ஆளுநரிடம் உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பிறகு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட ஊழல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர்களின் ஊழல் ஆதாரங்களின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்குகள் பதியப்பட்டது. அவர்களது பண்ணை வீடுகள், நட்சத்திர ஓட்டல்கள், குவாரிகள் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில், பணம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி நகைகள், வங்கி முதலீடுகள், சொத்து, காப்பீடு நிறுவனங்களில் முதலீடு உள்பட ஏராளமான ஆவணங்கள் சிக்கின.இதேபோல், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மாநில தலைவருமான சேலம் இளங்கோவன், தனது பதவிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக 40க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி, பல கோடி ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் கடந்த டிசம்பர் 15ம் தேதி அதிமுகவின் அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான தங்கமணி தொடர்புடைய 69 இடங்களில் சோதனை நடத்தினர். அதில் கிரிப்டோகரன்சியில் அவர் முதலீடு செய்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி.அன்பழகன், தனது பதவிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 சொத்து குவித்ததாக தொடர் புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.அதைதொடர்ந்து முறைகேடு குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராக பதவி வகித்த முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன்(62), தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது அவரது மனைவி மல்லிகா(55), மகன்கள் சசிமோகன்(29), சந்திரமோகன்(32), மருமகள் வைஷ்ணவி(32) ஆகியோர் பெயரில் சொத்துக்கள் வாங்கி குறித்ததும், பினாமிகள் பெயரில் சொத்துக்கள் வாங்கியும், பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததும் தெரியவந்தது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது வருமானத்தை மீறி 11.32 கோடி சொத்துக்கள் சேர்த்தது தெரியவந்தது.

பின்னர் தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பழகன்(62), தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி என 5 பேர் மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.அதைதொடர்ந்து முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், உறவினர்கள், பினாமிகளுக்கு சொந்தமான தர்மபுரி, சேலம், சென்னை மற்றும் தெலங்கானா மாநிலம் என 58 இடங்களில் நேற்று காலை ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.குறிப்பாக தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்துள்ள கெரகோடஅள்ளியில் அன்பழகனுக்கு சொந்தமான பிரமாண்ட பங்களாவில் தர்மபுரி லஞ்சஒழிப்பு டிஎஸ்பி (பொறுப்பு) ஜெய்குமார் தலைமையில் வந்த  8 போலீசார்  சோதனையில் ஈடுபட்டனர். வீட்டிலிருந்த அன்பழகன், மனைவி, மகன்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி, பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இதேபோல் அன்பழகன் வீட்டருகே வசிக்கும் அவரது உறவினர் சண்முகம், சித்தப்பா கோவிந்தன், பால் சொசைட்டி நடத்தும் சந்திரசேகர் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தினர். மேலும், தர்மபுரி மாவட்டம் பூலப்பட்டியில் உள்ள அன்பழகன் மகள் வித்யா வீடு, பெரியாம்பட்டியில் உள்ள கிரஷர், பொன்னேரியில் உள்ள குவாரி, அன்னசாகரத்தில் உள்ள தர்மபுரி நகர அதிமுக செயலாளர் பூக்கடை ரவி வீடு, தாளம்பள்ளத்தில் உள்ள மாநில விவசாய அணித்தலைவர் அன்பழகன் வீடு, நல்லம்பள்ளியில் உள்ள அன்பழகன் மனைவியின் தம்பிக்கு சொந்தமான குவாரி, பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் பாஸ்கர் வீடு, அன்பழகன் மாமனார் அப்பனகவுண்டர், மைத்துனர் செந்தில் வீடு, தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், கேபி அன்பழகனுடன் நெருக்கமாக இருந்த தர்மபுரி தாசில்தார் ராஜராஜன் வீடு உள்பட தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 53 இடங்களில் சோதனை நடந்தது.

 இதேபோல், சேலம் இரும்பாலை ராசிநகரில் உள்ள அன்பழகனின் ஆதரவாளரான ஜெயபால் என்பவருக்கு சொந்தமான சொகுசு பங்களாவிலும் சோதனை நடந்தது. டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையில் நடந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியது.  ஜெயபால் தற்போது கரூர் மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குநராக உள்ளார். அதைதொடர்ந்து சென்னையில் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான வீடு, நிறுவனங்கள் மற்றும் மருமகள் வைஷ்ணவியின் உறவினர் வீடு, நிறுவனங்கள் என 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அன்பழகனின் நிறுவனம்,கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கணேஷ் கிரானைட், நுங்கம்பாக்கம் கதீட்ரல் கார்டன் லைனில் உள்ள வைஷ்ணவியின் உறவினரான என்.சிவகுமார் பெயரில் உள்ள வீடு, அடையாறு காந்தி நகரில் என்.சிவகுமார், நீலாங்கரை ரூபி காம்ப்ளக்ஸ் சாலையில் உள்ள வீடு ஆகியவற்றில் சோதனை நடந்தது.

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான குறிப்பாக அவரது சொந்த மாவட்டமான தர்மபுரி மாவட்டத்தில் 53 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடம், சென்னையில் 3 இடம், தெலங்கானா மாநிலத்தில் ஒரு இடம் என 58 இடங்களில் இந்த சோதனை நடந்தது. 13 மணி நேரம் நடந்த இந்த சோதனை முடிவில் 2 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 650 ரூபாய் ரொக்க பணம், 6 கிலோ 637 கிராம் தங்க நகைகள் மற்றும் கட்டிகள், 13 கிலோ 85 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணத்தில் 22 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கு மட்டும் கணக்கு காட்டப்பட்டது. மீதமுள்ள 2 கோடியை 65 லட்சத்து 31 ஆயிரத்து 650 ரூபாய்க்கு கணக்கு காட்டவில்லை. இதனால் கணக்கில் வராத 2.65 கோடி பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள், பணம், தங்க நகைகள், முதலீடு பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் 6வது நபரான முன்னாள் அமைச்சராக அன்பழகன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்சியினருக்கு மூன்று வேளையும் உணவு

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை முதல் ரெய்டு நடத்தினர். தகவல் அறிந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது வீட்டின் முன் திரண்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, கூட்டத்தை கட்டுப்படுத்தினர். ஒருசில இடங்களில் இருந்து பெண்கள் சரக்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு காலையில் இட்லி, வெண் பொங்கல், டீ, பிஸ்கட் வழங்கப்பட்டது. மதியம் தக்காளி சாதம், மாலையில் பிஸ்கட் வழங்கப்பட்டது.

சர்ச்சை நிர்வாகிகள் வீடுகளிலும் ‘ரெய்டு’

* தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் முன்னாள் அமைச்சர் அன்பழகன் மற்றும் உறவினர்கள், ஆதரவாளர்கள் தொடர்புடைய இடங்களில் 200க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

* சோதனை நடப்பதை அறிந்ததும் தர்மபுரி மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் காவேரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் அன்பழகன் வீட்டின் முன்பு திரண்டனர். அரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சம்பத்குமாரும் அங்கு வந்தார். அப்போது அவர்களுக்கு போன் ஒன்று வந்தது. இதுதொடர்பாக கவுன்சிலர் காவேரி கூறுகையில், ‘‘தொண்டர்கள் யாரும் சோதனைக்கு இடையூறு செய்யக்கூடாது. கோஷங்கள் எழுப்பக்கூடாது என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்,’’ என்றார்.

* தர்மபுரி மாவட்டம் அரூர் சோரியம்பட்டியில் உள்ள பி.டி.ஆர்.வி கல்வி நிறுவனங்களில் 4பேர் கொண்ட விஜிலென்ஸ் குழுவினர் சோதனை நடத்தினர். இந்த கல்வி நிறுவனத்தை ஆதரவாளர்கள் பெயரில் அன்பழகன் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

* பென்னாகரத்தை அடுத்துள்ள தாளம்பள்ளத்தை சேர்ந்த டி.ஆர்.அன்பழகன் வீட்டிலும் சோதனை நடந்தது. அதிமுக மாநில விவசாய அணித்தலைவரான இவர், சமீபத்தில் ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

* முன்னாள் அமைச்சர் அன்பழகன் வீட்டின் முன்பு ஒன்று கூடி போராட்டம் நடத்த வந்த அதிமுகவினருக்கு மதியம்  விருந்து தடபுடலாக அளிக்கப்பட்டது.

* தர்மபுரி நேரு நகரில் உள்ள அன்பழகனின் உதவியாளர் பொன்னுவேல் வீட்டிலும் அதிகாலை முதல் சோதனை நடந்தது. நவீன வசதிகளுடன் கூடிய இவரது பிரமாண்ட பங்களாவில் சோதனை நடத்தப்பட்டது. இவர், தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் விருதுநகர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி

வீட்டிலும் ரெய்டு: பினாமியாக செயல்பட்ட ஆவணங்கள் சிக்கியதுமுன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு நெருக்கமாகவும், நம்பிக்கையான நபராக இலக்கியம்பட்டியில் வசித்து வரும் பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி உள்ளார். அன்பழகனின் தீவிர ஆதரவாளரான இவர், பினாமியாக உள்ளதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் தான் கோவிந்தசாமிக்கு முன்னாள் அமைச்சர் அன்பழகன் அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் சண்டை போட்டு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு எம்எல்ஏ சீட்டு வாங்கி கொடுத்ததாகவும் அதிமுக வட்டாரங்களில் அப்போது பேசப்பட்டது. தற்போது அதை உறுதி செய்யும் வகையில் பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏவாக உள்ள கோவிந்தசாமி வீடு, அவரது சகோதரர் பழனிசாமி வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.இந்த சோதனையில் முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு தொடர்பான பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சிக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக அன்பழகனுக்கு பினாமியாக செயல்பட்டதற்கான முக்கிய ஆவணங்கள் பல சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத்தில் இருந்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: