×

கிராவல் மண் திருட்டு: பிப்.3க்குள் முடிவெடுக்க கூடுதல் தலைமை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தேனி மாவட்டம் வீரநாயக்கன்பட்டியில் அரசு நிலங்களில் இருந்து முறைகேடாக 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மண் எடுக்கப்பட்ட புகாரில் கனிமவளத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு நிலங்களில் இருந்து அனுமதி இல்லாமல் ரூ.500 கோடி அளவிற்கு கிராவல் மண் எடுத்ததாக உப்பார்பட்டியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் புகார் அளித்திருந்தார். இதில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவர்களது உறவினர்கள் மூலமாக இந்த அனுமதியை பெற்று கிராவல் மண் எடுத்ததாகவும் இதற்காக வருவாய்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்ததாகவும் அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுக்குள் உள்ளாகிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி கோரப்பட்ட போது கனிமவளத்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் அனுமதி அளிக்கவில்லை என்றும் வருவாய் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே கனிமவளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரும் மனு மீது பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Tags : Chennai High Court ,chief secretary , Gravel soil
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...