முகக்கவசம் அணியாத ஊழியர்களை வெளியேற்ற வேண்டும்; தனியார் தொழில் நிறுவனங்களுக்கு பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை

சென்னை: அனைத்து தொழில் நிறுவனங்களிலும் முகக்கவசம் அணியாத பணியாளர்களை பணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை ஜனவரி மாதத்தில் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து பொது இடங்களிலும், குறிப்பாக தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் அதிக அளவில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அங்கு தீவிரமாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி, அனைத்து நிறுவனங்களிலும் ஊழியர்களின் உடல் நிலையைக் கண்காணித்தல் அவசியம். ஊழியர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பத்தினருக்கோ காய்ச்சல், சளி, உடல் வலி, தொண்டை வலி போன்ற கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்களைத் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பணிக்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும். 99 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவானால், அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்தல் அவசியம். மூக்கு, வாய் ஆகியவற்றை முழுமையாக மூடியபடி ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்வது முக்கியம். இதனைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமிக்கவோ அல்லது சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்யவோ தொழில் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களை பணியிடங்களில் இருந்து வெளியேற்றி உத்தரவிட வேண்டும்.

பணியிட வளாகத்துக்குள் தனி நபர் இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்தல் அவசியம். அதேபோன்று கை கழுவுவதற்கான வசதிகள், சானிடைசர் வசதிகளை ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். அலுவலக உணவு விடுதிகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அமர்ந்து உணவருந்த வேண்டும். தொழில் நிறுவனங்களின் குடியிருப்புகள், போக்குவரத்து சேவைகளின்போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவாத வகையில் நடவடிக்கை எடுக்கலாம். ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் இரு தவணைகளும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்தல் அவசியம்.

300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் நோய்த் தடுப்பு விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனமே சுகாதார ஆய்வு அதிகாரிகளை பணியமர்த்தலாம். கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் இணையவழியே பயிற்சிகளை வழங்கவும் நிறுவனங்கள் முன்வர வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை அனைத்து தொழில் நிறுவனங்களும் பின்பற்றுகின்றனவா என்பதை மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள் ஆய்வு செய்ய வேண்டும். விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: