ஹோட்டல் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருட்களை விற்பனை செய்த நைஜீரியர் உட்பட 4 பேர் கைது

பெங்களூரு: தமிழகத்தில் ஹோட்டல் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருட்களை விற்பனை செய்த நைஜீரியர் உட்பட 4 பேரை பெங்களூரு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக பெங்களூரு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் பெங்களூரு எலெக்ட்ரானிக் தெருவில் வைத்து நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவர் மற்றும் சென்னையை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 84 கிராம் கொகைன் உட்பட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவர்களுடன் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளியான நைஜீரியர் பெரும்பாலும் தமிழகத்தில் ஹோட்டல்கள், பப் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவது தெரியவந்தது. பிடிபட்ட நைஜீரியர் போதைப்பொருள் கடத்துவது விற்பனை செய்வது மட்டுமல்லாமல் பல்வேறு விதமாக போதை அதிகரிக்கும் பொருட்களை உருவாக்க கற்றுக்கொடுப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த போதைப்பொருள் விற்கும் கும்பல் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

Related Stories: