முந்தைய உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு பணியில் மதிப்பெண், சீனியாரிட்டி பதவி உயர்வு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணியில் மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில்  பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசுப் பணிகளில் மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என டிஎன்பிஎஸ்சி செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செந்தூர் என்பவர் உட்பட பலர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழங்கப்பட்ட உத்தரவை 12 வாரத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதுகுறித்து ஜனவரியில் விசாரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த அவமதிப்பு வழக்கானது நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு அதிகாரிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, வில்சன், கிரி ஆகியோர் வாதத்தில், ‘டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணிகளில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் முன்னதாக வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதில் எங்களுக்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது. மாநிலத்தில் கொரோனா, மழை வெள்ள பாதிப்பு என அடுத்தடுத்த பிரச்னைகள் சுழற்சியாக இருந்துள்ளது. அதுபோன்ற சூழ்நிலையில் பதவி உயர்வு, பணிநியமன தேர்வு தொடர்பான வேலைகளை எப்படி செய்ய முடியும்? அது சாத்தியமில்லாத ஒன்று. அதனால், இந்த விவகாரத்தில் காலதாமதம் ஆனதற்கு எங்களுடைய மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறோம். அதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும். மேலும், இந்த அரசு அதிகாரிகள் அனைவரும் மிக சீனியர்களாக பணியாற்றி வருவதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்,’ என தெரிவித்தனர். இதையடுத்து, அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம் உட்பட 9 அதிகாரிகளும் காணொலி மூலம் ஆஜராகி நீதிபதிகள் முன்னிலையில் தங்களுக்கான விளக்கங்களையும், கால தாமதத்திற்கான காரணத்தையும் தெரிவித்தனர்.

அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘‘உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு அதிகாரிகள் அதனை தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை. அதற்குண்டான ஆரம்ப கட்ட பணிகளை கூட செய்யாமல்தான் இருக்கின்றனர். அதனால், இந்த அதிகாரிகளுக்கு எந்த நிவாரணமும் வழங்கக் கூடாது. இவர்கள் செய்த தவறால் பல அரசு ஊழியர்கள் பாதித்துள்ளனர். அதனால், இவர்களுக்கு ஒரு மாதமாவது சிறை தண்டனை வழங்க வேண்டும்,’ என தெரிவித்தார்.

பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அரசு அதிகாரிகளின் நிபந்தனையற்ற மன்னிப்பை நீதிமன்றம் ஏற்கிறது. அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதில், நீதிமன்றத்துக்கு தனிப்பட்ட விருப்பு எதுவும் கிடையாது. இருப்பினும், அரசு ஊழியர்கள் உங்களுடைய செயல்பாட்டால் பாதிப்படைய கூடாது. நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்கும் போது அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதனால், இதுபோன்று தவறுகள் எதிர்காலத்தில் நடக்காமல் அரசு அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணியில் மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.  இந்த உத்தரவு நீதிமன்றத்தை அணுகிய மனுதாரர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பொருந்தும்,’ என தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற அவதிமதிப்பு வழக்குகளை முடித்து வைத்தனர். பிற மனுக்களை வரும் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.அதிகாரிகளுக்கு எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது. இவர்கள் செய்த தவறால் பல அரசு ஊழியர்கள் பாதித்துள்ளனர். அதனால், இவர்களுக்கு ஒரு மாதமாவது சிறை தண்டனை வழங்க வேண்டும்

Related Stories: