வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சியில் உள்ள கோட்டூர் கிராமம், மாசாடச்சியம்மன் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக நிலாப்பெண் தேர்வு விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான நிலாப்பெண் தேர்வு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் பிரகதீஷா (11) என்ற 6ம் வகுப்பு மாணவி நிலாப்பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார். முதலில், இவருக்கு ஊர் எல்லையில் உள்ள சரலைமேடு என்னுமிடத்தில் கிராமமக்கள் ஆவாரம்பூ வைத்து அலங்காரம் செய்தனர். பிறகு தலையில் ஆவாரம்பூ கூடையோடு ஊர்வலமாக முக்கிய தெருக்கள் வழியாக கோயிலுக்கு அழைத்து வந்தனர். கோயில் முன்பாக மாவிளக்கு, முளைப்பாரி வைத்து கும்மியடித்து வழிபட்டனர்.