தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு விவகாரம் குடும்பத்தினர் சமரச முயற்சியா?: தனுஷ் தரப்பு தொடர்ந்து பிடிவாதம்

சென்னை: தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு விவகாரத்தில் குடும்பத்தினர் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் தனுஷ் தரப்பு தொடர்ந்து பிடிவாதமாக உள்ளதாக தெரிகிறது.நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை கடந்த 2004 நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். தனுஷை விட இரண்டு வயது மூத்தவர் ஐஸ்வர்யா. 22 வயதான தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகள் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதியர் திடீரென மனமொத்து பிரிவதாக அறிவித்து கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிக்கையை இருவருமே பதிவிட்டனர்.

இதற்கு காரணம், குடும்பத்தில் ஏற்பட்ட சண்டைதான் என கூறப்படுகிறது. வழக்கமாக கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் சிறுசிறு மோதல்தான் இந்த பிரச்னைக்கு காரணம் என்கிறார் தனுஷின் அப்பாவும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா. அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டாலும் தனுஷ் - ஐஸ்வர்யா இணைந்து பொது நிகழ்ச்சிகளில் தோன்றி தங்கள் உறவு சுமுகமாக இருப்பதை காட்டிக்கொண்டனர். சமீபத்தில்தான் இவர்கள் இருவரும் கோயிலுக்கு சென்று மாலையும் கழுத்துமாக நின்ற புகைப்படம் இணையத்தில் வெளியானது. தனுஷின் சினிமா வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

தமிழ் படங்கள் மட்டுமல்லாது, பாலிவுட், ஹாலிவுட் என பிசியானார் தனுஷ். ஐஸ்வர்யாவும் சினிமாவில் கவனம் செலுத்தினாலும் ஆன்மிகத்தின் பக்கம் பார்வையை திருப்பினார். கடந்த ஆண்டு அப்பா ரஜினிகாந்த் உடன் இமயமலைக்கு பயணப்பட்டார். பத்ரிநாத், கேதார்நாத் சென்று வந்தது முதலே நிறைய மாற்றங்கள் ஐஸ்வர்யாவின் வாழ்க்கையில் தென்பட ஆரம்பித்தது. ஆன்மிகத்தின் பக்கம் கவனத்தை திருப்பிய ஐஸ்வர்யா, யோகாவில் ஆர்வம் காட்ட தொடங்கினார். பெண்களுக்காக திவா யோகா மையத்தை தொடங்கினார். ஹாலிவுட் படத்துக்காக தனுஷ் அமெரிக்காவுக்கு சென்றபோது ஐஸ்வர்யாவையும் குழந்தைகளையும் அழைத்து சென்றார்.

ஆனால், அங்கேயே தம்பதிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஐஸ்வர்யா மட்டும் அமெரிக்காவிலிருந்து திரும்பிவிட்டார். தனுஷ் சென்னைக்கு வந்த பிறகு இந்த பிரச்னை பூதாகரமானது. மகள், மருமகனின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் ரஜினிகாந்தை நிறையவே பாதித்துள்ளது. இருவரையும் அவர் அழைத்து பேசினாலும் பிரியவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இதனையடுத்தே இருவரும் பரஸ்பரம் தங்கள் முடிவை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் இப்போது மீண்டும் தனுஷ், ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க ரஜினி குடும்பத்தாரும் கஸ்தூரிராஜா குடும்பத்தாரும் சமரச முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம், தனது முடிவில் தனுஷ் பிடிவாதமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: