மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு காண நிபுணர் குழு ஆய்வு ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஜி.எஸ்.மணி தாக்கல் செய்திருந்த மனுவில், மழை நீர் வடிகாலுக்கான முறையான நடைமுறையை சென்னை மாநகராட்சி பின்பற்றவில்லை. எனவே, சென்னையில் மீண்டும் மழைநீர் தேங்காத வகையில், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் நிபுணர் குழு அமைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அனிதா ஆஜராகி, இதேபோன்ற மற்றொரு வழக்கில் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், குழு  அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு தள்ளபடி செய்யப்பட்டது.

Related Stories: