தொழிலாளர் ஆணையர் அலுவலக கட்டுமான பணியை அமைச்சர் ஆய்வு

சென்னை: புதிய தொழிலாளர் ஆணையர் அலுவலக கட்டுமான பணிகளை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். சென்னை, அண்ணாநகர் 6வது அவென்யூவில் அமைந்துள்ள தொழிலாளர் குடியிருப்பு வளாகத்தில் ரூ.17 கோடி செலவில், கட்டப்பட்டு வரும் புதிய தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது தரமான கட்டுமான பொருட்கள் உள்ளதா, கட்டுமான பணிகள் எந்த அளவில் நடைபெற்று வருகிறது உள்ளிட்ட கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்பு கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களிடம் கூறும்போது, “தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம், இந்த கட்டுமான பணிகள் முடிவடைந்தவுடன் சென்னை, அண்ணாநகர் 6வது அவென்யூவில் அமைந்துள்ள தொழிலாளர் குடியிருப்பு வளாகத்திற்கு மாற்றப்படும்” என்று தெரிவித்தார்.

Related Stories: