வாடகை தாயாக இருந்தால் ரூ.5 லட்சம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டனர்: தனியார் மருத்துவமனை மீது இளம் பெண் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

சென்னை: வாடகை தாயாக இருந்தால் ரூ.5 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாக தனியார் மருத்துவமனை மீது பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரியை சேர்ந்த 24 வயதான இளம் பெண் ஒருவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் நான், எனது தோழியான ரம்யா என்பவர் மூலம் அமைந்தகரை காவல் நிலைய எல்லையில் உள்ள குழந்தை பிறப்பிற்கான தனியார் சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றி வரும் முரளி என்பவர் வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு நான் சம்மதம் தெரிவித்து மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு சென்றேன். அப்பொழுது ஒரு ஆண் குழந்தை என்றால் ரூ.4 லட்சம் என்றும், இரட்டை குழந்தை என்றால் ரூ.5 லட்சம் கொடுப்பதாக பேசி ஒப்பந்தம் செய்து கையெழுத்து பெற்றுக்கொண்டேன்.

பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு கருவுற்ற 7-வது மாதத்தில் அதாவது கடந்த 3ம் தேதி அதே மருத்துவமனையில் தனக்கு இரட்டை குழந்தை பிறந்து குழந்தைகளை மருத்துவமனை ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். பின்னர் தான் சிகிச்சை முடிந்து வீட்டிற்குச் சென்று மீண்டும் ஒரு வாரம் கழித்து ஸ்கேன் செய்வதற்காக மருத்துவமனை சென்றபோது குழந்தை இறந்து விட்டது என்றும், அதனால் ஒப்பந்தப்படி ரூ.5 லட்சம் பணம் கொடுக்க முடியாது என்றும் கூறி, ரூ.10 ஆயிரத்தை மட்டும் கொடுத்து அனுப்பினர். எனவே என்னை ஏமாற்றிய  தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த அமைந்தகரை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: